பவானி,மார்ச்12: பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுவதோடு செடி,கொடிகள் திடீர் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பவானி அடுத்த ஜம்பை,நத்தக்காட்டுதோட்டம் பகுதியில் நவீன் பிரதாப் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காய்ந்த சருகுகளில் நேற்று தீ பிடித்துள்ளது.
இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.தொடர்ந்து, சித்தோடு பைபாஸ் அருகே உள்ள செல்லப்பம்பாளையம் பகுதியில் காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தபடி பரவியது.
இதைக்கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கடுமையான வெப்பம் நிலவுவதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு பணி மேற்கொண்டதாகவும் பவானி தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
The post பவானி சுற்று வட்டாரத்தில் கொளுத்தும் வெயிலால் கடும் வெப்பம் ஒரு வாரத்தில் 20 இடங்களில் தீ விபத்து appeared first on Dinakaran.